வங்க கடலில் மூழ்கும் சென்னை.. 2040ல் இதுதான் நடக்கும்! காலநிலை மாற்றம் குறித்த ஆய்வில் ஷாக்
சென்னை: காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் 2040க்குள் சென்னை, தூத்துக்குடியின் சில பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் என்று ஆய்வுகள் எச்சரித்துள்ளன.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் என்பது தீவிர பிரச்னையாக இருக்கிறது. இதற்கு காரணம் பூமியன் வெப்பநிலை உயர்வுதான். தொழிற்சாலைகள், வாகன புகை, கிரீன்ஹவுஸ் வாயுவை வெளியேற்றும் மின்சாதன பொருட்களின் பயன்பாடு ஆகியவை பூமியின் வெப்பத்தை உயர்த்துகிறது. என்னதான் நாம் முயற்சி செய்தாலும் இதை தடுக்க முடியாது. ஆனால், தொழிற்புரட்சிக்கு முந்தையை காலத்தில் பூமியின் வெப்பநிலை எவ்வளவு இருந்ததோ, அதை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக அனுமதித்துக்கொள்ளலாம்.
ஆனால் தற்போது இந்த அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி, பூமியை சூடாக்கிக்கொண்டிருக்கிறோம். பூமி சூடாவதால் அண்டார்டிகா, ஆர்டிக் என துருவ பகுதியில் உள்ள பனி வேகமாக கரைகிறது. இதனால் உலகம் முழுவதும் கடல் நீர் மட்டம் வேகமாக உயர்கிறது. மட்டுமல்லாது முன்கூட்டியே கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு பக்கம் கொடூரமான மழை, வெள்ளமும், மறுபக்கம் தாங்க முடியாத வெப்பமும் வாட்ட தொடங்குகின்றன. இதைத்தான் காலநிலை மாற்றம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இப்படி இருக்கையில், பெங்களூரை சேர்ந்த ‘அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம்’ (CSTEP) எனும் ஆராய்ச்சி அமைப்பு சென்னை உட்பட பல கடலோர நகரங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதாவது காலநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் வேகமாக உயர்கிறது என்றும், இதனால் வரும் 2040ம் ஆண்டுக்குள் மும்பை, புதுச்சேரியின் ஏனம் பகுதி மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களின் 10% பகுதிகள் கடலுக்குள் மூழ்கிவிடும் என்று எச்சரித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை 2040க்குள் 5-10% நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கிவிடும். சென்னையை தவிர கொச்சி மங்களூர், விசாகப்பட்டினம், ஹல்டியா, உடுப்பி, பூரி உள்ளிட்ட பகுதிகளும் 2040க்குள் 1-5% நிலப்பரப்பை இழந்துவிடும். இது தென்னிந்தியாவின் சுற்றுலாவை கடுமையாக பாதிக்கும். இப்படியே போனால் 2100ம் ஆண்டில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு கடுமையாக இருக்கும்.
இந்த பகுதியில் உள்ள பவளப்பாறைகள் அழிந்துவிடும். சதுப்பு நிலங்கள் காணாமல் போய்விடும். இவையெல்லாம் சூழலியலை சமமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2050ம் ஆண்டில் கடலோர நகரங்களில் வசிக்கும் 80 கோடிக்கும் அதிகமான, அதாவது உலக மக்கள் தொகையில் 10 சதவிகித மக்கள் பெரும் ஆபத்தை எதிர்கொள்வார்கள் என்று CSTEP எச்சரித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகியவற்றால் சூழப்பட்ட இந்தியா, 7,517 கிமீ கடற்கரையைக் கொண்டுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் என 9 மாநிலங்கள் கடலோரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த மாநிலங்களில் சுமார் 170 மில்லியன் மக்கள், அதாவது நாட்டின் மக்கள்தொகையில் 15.5% கடலோரமாக வசிக்கின்றனர். இது மட்டுமல்லாது 13 பெரிய துறைமுகங்கள் மற்றும் 180 சிறிய துறைமுகங்கள் இந்த மாநிலங்களில் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் கடல் நீர் மட்டம் உயர்வால் கடுமையாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
qviqtu