வெளிநாட்டு விவகாரங்களில் தலையீடு- ரஷ்ய ஊடகங்களுக்கு மெட்டா தடை

வெளிநாட்டு விவகாரங்களில் தலையீடு குற்றச்சாட்டை தொடர்ந்து சில ரஷ்ய ஊடகங்களுக்கு மெட்டா நிறுவனம் தடை விதித்து உள்ளது.இது விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளின் அரசியலில் ஆதிக்கம் செலுத்த ரஷ்யா ஊடகங்கள் முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அதனை பல்வேறு நாடுகள் விசாரித்து வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்காவில் அரசியல் பிளவுகளை ஏற்படுத்துவதற்காக ஊடக நிறுவவனத்திற்கு ரகசியமாக நிதி அளிக்க முயன்றதாக ‘ரஷ்யா டுடே’ நிறுவனம் மீது அமெரிக்கா நீதித்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது. இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் உளவுத்துறை எந்திரத்தின் முழு நேர உறுப்பினராக ‘ரஷ்யா டுடே’ செயல்படுவதாக குற்றம்சாட்டிய ஜோ பைடன் நிர்வாகம், அதன் மீது பல்வேறு தடைகளை விதித்து உள்ளது.
பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டா கிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் தாய் நிறுவனம் மெட்டா. இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மிகத்தீவிரமான பரிசீலனைக்கு பிறகு, ரஷ்யாவை சேர்ந்த ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறோம். அந்நாட்டை சேர்ந்த ‘ரஷ்யா டுடே’, ரோஸியா செகோட்ன்யா உள்ளிட்ட நிறுவனங்கள், சர்வதேச விவகாரங்களில் தலையிட்டதற்காக எங்களது செயலிகளில் இருந்து உலகம் முழுதும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.